தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 16.12.2024 அன்று துவங்க இருந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்டு தற்போது நாளை 03.01.2025 முதல் 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தகவல்
ஆறாவது சுற்று கோமாரி நோய் (Foot and Mouth Disease) தடுப்பூசி திட்டம் - தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 16.12.2024 அன்று துவங்க இருந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்டு தற்போது நாளை 03.01.2025 முதல் 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோமாரி நோயானது வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது நடைபெறவுள்ள ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் விடுபாடின்றி தடுப்பூசி போட்டு பயன்பெறவும், தடுப்பூசி போடுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment