ஆக.31, ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமான்குளம் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமான்குளம் கிராமத்தில் ஆட்டு பட்டி அமைத்து 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் இரவில் அங்கே தங்கி விடுவாராம். வழக்கம் போல் நேற்று ஆக.30 அவர் ஆடுகளை மேய்த்து விட்டு இரவில் அங்கேயே தங்கி விட்டார்.
இந்நிலையில் இன்று ஆக.31, காலையில் பார்த்தபோது சுடலை தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் முகம் சிதைக்கப்பட்டநிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் சுடலைக்கு சொந்தமான ஆடுகள் பக்கத்தில் உள்ள நிலத்தில் 2 தினங்களுக்கு முன்பு மேய்ந்த போது அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

No comments:
Post a Comment