தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.27, ஒவ்வொரு ஆண்டும் ‘பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல் புரிந்த 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பாராட்டுப் பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்புரிந்து வரும் 13 வயது முதல் 18 வயது வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
அதாவது, 31 டிசம்பர் 2024ன்படி 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளாக இருத்தல் வேண்டும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதைப் போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று வழங்கப்படுகிறது.
எனவே, தாங்கள் புரிந்த சாதனைகளை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வருகின்ற 30.09.2024 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிர் தரவு, (Bio Data) சுயசரிதை (ம) கடவுச்சீட்டு அளவு 2 புகைப்படம், ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் ( தமிழ் - மருதம் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருது பெற்றிருப்பின் அதன் விவரம் விருதின் பெயர் யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படத்துடன் இணைக்க வேண்டும், சேவையைப் பாராட்டி வரப்பெற்ற பத்திரிகை செய்திக் குறிப்புகள், இணைப்புப் படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து இணைக்கப்பட வேண்டும், அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு தலா 2 நகல்கள் வருகின்ற 30.09.2024 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment