தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12-ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 8-ம் திருவிழாவான இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி அம்பாள் எழுந்தருளிய சப்பரத்தினை வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த 8-ம் நாள் திருவிழாவில், திருக்கோவிலில் சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
No comments:
Post a Comment