தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 09, தூத்துக்குடி மாவட்டத்தில் 07.04.2024 அன்று நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் குறிப்பாணை பெற்ற 143 நபர்கள் இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கோ. லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவது தொடர்பாக, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 8026 அலுவலர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டது. அதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்- 1947 நபர்களுக்கும், வாக்குச்சாவடி அலுவலர் I – 1947 நபர்களுக்கும், வாக்குச்சாவடி அலுவலர் II – 1947 நபர்களுக்கும், வாக்குச்சாவடி அலுவலர் III – 1947 நபர்களுக்கும் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் IV - 238 நபர்களுக்கும் ஆணை அனுப்பப்பட்டது.
மேற்படி பயிற்சி வகுப்பில் 143 அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதால், மேற்படி 143 நபர்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951 பிரிவு 134-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரால் காரணம் கேட்டும் குறிப்பாணை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, காரணம் கேட்கும் குறிப்பாணை குறித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை இரு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திடவும், தவறும் பட்சத்தில் மேற்படி அலுவலர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment