மஞ்சும்மல் பாய்ஸ் ‛எபெக்ட்’.. கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 31 March 2024

மஞ்சும்மல் பாய்ஸ் ‛எபெக்ட்’.. கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்.

தூத்துக்குடி, மார்ச் 31, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் பகுதியில் போட்டோ எடுக்க முயன்றபோது 100 அடி பள்ளத்தில் தூத்துக்குடி இளைஞர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலம் கொடைக்கானலாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் வெளியான ‛மஞ்சும்மல் பாய்ஸ்' எனும் மலையாள திரைப்படத்தால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. 


இந்த திரைப்படம் என்பது கொடைக்கானலில் உள்ள குணா குகையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கேரளாவில் இருந்து நண்பர்கள் கொடைக்கானல் சுற்றுலா வருவார்கள். அவர்கள் குணா குகைக்குள் தடையை மீறி நுழையும் நிலையில், ஒருவர் அங்குள்ள பள்ளத்துக்குள் விழுவதும், அவரை காக்க தீயணைப்பு வீரர்கள் அஞ்சும் நிலையில் இன்னொரு நண்பர் தனது உயிரை பணயம் வைத்து மீட்கும் திக்திக் சம்பவம் தான் இந்த படமாகும். உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.


இந்நிலையில் தான் ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை போன்ற இன்னொரு சம்பவம் கொடைக்கானலில் இன்று நடந்துள்ளது. அதாவது தூத்துக்குடியை சேர்ந்த 6 நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் இன்று கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு சென்றனர். 

பாறையின் உச்சியில் நின்றபடி அவர்கள் போட்டோ எடுக்க முயன்ற சமயத்தில் தன்ராஜ் (வயது 22) என்பவர் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்துக்குள் விழுந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று 100 அடி பள்ளத்தில் விழுந்த தன்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


டால்பின் நோஸ் பாறையில் இருந்த இளைஞர் விழுந்ததாக கூறப்படும் பள்ளத்தாக்கு பகுதியில் அவர்கள் தீவிரமாக தேடினர். சுமார் 1 மணிநேரத்துக்கு மேலாக தேடிய நிலையில் தன்ராஜ் மீட்கப்பட்டார். 100 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில் அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.


அதன்பிறகு தன்ராஜ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார். இந்த சம்பவம் இன்று கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான இடங்களை செல்ல வேண்டும். மலை உச்சிகள், பாறைகளில் போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad