தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்திருநகரி யூனியன், தேமான்குளம் பஞ்சாயத்தை சார்ந்த முதலைமொழி கிராமத்தில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நோய் பரவும் நிலையில் உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் இந்நிலையில் டெங்கு போன்ற கொடிய நோய் பரவினால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பல மாதங்களாக இது போன்ற அடிப்படை பிரச்சினை இருந்து வந்த போதிலும், உடனடி தேவையாக போர் கால அடிப்படையில் சீரான சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதியினர் கூறினர்.
முதலைமொழி கிராமத்தில் உள்ள மதிமுக பிரமுகர் லூ.மாசிலாமணி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேமான்குளம் பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்த திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜிடம் மனு அளித்துள்ளோம், மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் விரைவில் தங்களது பகுதியிலுள்ள குறைகள் சரி செய்யப் படும் என கூறி சென்றிருக்கிறார்.
ஆனால் வாக்குறுதி கொடுத்து சென்று பல மாதங்களாகிய நிலையில், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை பார்த்த பிறகாவது பதில் கிடைக்குமா? நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து ஆறு மாதங்களுக்கு முன்பு தி நெல்லை டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment