திருச்செந்தூர் கோவிலில் கடத்தப்பட்ட 1½ வயது குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு - ஆனந்த கண்ணீருடன் காவல்துறைக்கு நன்றிக் கூறிய பெற்றோர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

திருச்செந்தூர் கோவிலில் கடத்தப்பட்ட 1½ வயது குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு - ஆனந்த கண்ணீருடன் காவல்துறைக்கு நன்றிக் கூறிய பெற்றோர்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான முத்துராஜ் - ரதி தம்பதியின் 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ். முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தி சென்றார்.



இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையில் 25 பேர் அடங்கிய 4 தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.


இந்நிலையில் போலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாக கோவை ஆலாந்துறை போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.


பின்னர் டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி குழுவினர் கொண்ட ஆலாந்துறை போலீசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 


விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். பின்னர் ஆலாந்துறை போலீசார் சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை, சேலம் ஆத்தூரை அடுத்த தென்னம்பிள்ளையூர் கிராமத்தில், பச்சியம்மாள் என்பவர் வீட்டில் இருந்து போலீசார் குழந்தையை நேற்று மீட்டனர். இதையடுத்து, இன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் கொண்டு வரப்பட்ட குழந்தை ஹரிஷ், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்ராஜ் முன்னிலையில் பெற்றோர் முத்துராஜ் மற்றும் ரதியிடம் ஒப்படைக்கப்பட்டது.


குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் அள்ளி அனைத்து முத்தமிட்டனர். பின்னர் ஆனந்த கண்ணீரில் 5 நாட்களாக ஓய்வின்றி சிறப்பாக பணியாற்றி குழந்தையை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad