தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சாதுநகர் பகுதியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வைத்து சிறப்பு திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது.தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, தேனி உட்பட மாவட்டங்களிலிருந்தும் 16 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசுகையில்,
"விளையாட்டில் ஜெயிக்கலாம், தோற்கலாம் ஆனால் அதில் ஈடுபாடுடன் விளையாடுவதே முக்கியம். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனமகிழ்ச்சியோடு நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். மேலும் கடின உழைப்புக்கு ஈடு இணையே இல்லை, எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும். நீங்கள் எதுவாக இருக்க வேண்டும் என்று நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள்.வெற்றி என்பது பணம், பதவி கிடையாது, அவைகளைத் தாண்டி உங்கள் திறமையை வெளி உலகத்திற்கு காட்டி தன்னம்பிக்கைக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். சிறப்பு திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சிறப்புரையை நிறைவு செய்தார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை என்.பாண்டியன் தலைமையில் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.இப்போட்டியில் கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தாஸ், தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் தலைவர் யோகீஸ், செயலாளர் வெற்றி மற்றும் காவல் துறையினர் என பலரும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment