தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசர கால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒவ்வொரு கிராமத்திலும் பேரிடர் காலங்களில் நிர்வாகத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் சேவை புரிய சமுதாய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி 47 , ஸ்ரீவைகுண்டம் 2, திருச்செந்தூர் 20, சாத்தான்குளம் 1, ஏரல் 27, கோவில்பட்டி 37, ஓட்டப்பிடாரம் 31, விளாத்திகுளம் 23, எட்டயபுரம் 5, கயத்தார் 7 என மொத்தம் 200 சமூக தன்னார்வலர்களுக்கு 10.08.2022 முதல் 21.08.2022, 03.09.2022 முதல் 14.09.2022 ஆகிய நாட்களில் முதல் கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்கள் வரும் பருவமழை காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்போகிறீர்கள். நீங்கள் மாவட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து பணியாற்ற போகிறீர்கள். மக்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் பெற்ற பயிற்சியினை செயல்படுத்த தயார்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். மேலும் நிர்வாகத்தோடு இணைந்து சமூக தன்னார்வலர்களாகிய நீங்களும் பணியாற்ற வேண்டும்.
தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்போது நீர் நிலைகளின் அருகாமையில் தாழ்வான பகுதிகளில், ஆற்றுப்படுகை கரையோரங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அங்கு உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்படும். முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுவார்கள். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் சென்று உதவி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் நீங்கள் பணியாற்றும் போது பொதுமக்களிடம் இந்த சமயத்தில் தங்களது உடமைகளை அதிகமாக கொண்டு வருவார்கள்.
அப்போது நீங்கள் அவர்களுடைய ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக், சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்து வருமாறு அறிவுரை கூற வேண்டும். பேரிடர் காலங்களில் உங்களுடைய பங்கு உதவிகரமாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் வெங்கடாசலம், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment