தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக "புத்தகத் திருவிழா 2022" நவம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து அக்டோபர் 22 அன்று "புத்தகத் திருவிழா – 2022" தொடர்பான இலச்சினையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும். சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெறவுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அற்புதமான பழக்கம். பாடப் புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரிய தகவல்களையும் கற்றறிந்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த புத்தக திருவிழாவினை பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும் முழுமையாக பயன்படுத்தி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment