தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் ஏப்.28 அன்று மாவட்ட எஸ்.பி. டாக்டர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எஸ்.பி. பேசுகையில், சமுதாயத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் சாதனையாளர்கள் பலர் சிறு கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடையை திறமையே அவர்களை சாதனையாளர்களாக மாற்றியது. நீங்களும் உங்கள் திறமையை வளர்த்துகொண்டு சிறந்த சாதனையாளர்களாக இந்த சமுதாயத்தில் வளர வேண்டும். மேலும் பெண்கள் சமூக வலைதளத்தில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் சுய விவரங்களை பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும்.
இதன் மூலமாக நமக்கே தெரியாமல் ஆபத்தில் நாம் சிக்கி கொள்ள நேரிடலாம். இதுபோன்ற செயல்களில் நீங்கள் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் தைரியமாக காவல்துறையிடம் புகார் தர முன் வரவேண்டும். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
விளையாட்டில் எப்படி விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால் வெற்றி பெற முடியுமோ அதே போல் வாழ்க்கையிலும் சில விதிமுறைகளை கடைபிடித்து குறிக்கோள்களை அடைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும், அதே போன்று நீங்களோ உங்கள் குடும்பத்தார்களோ ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான குறுஞ்செய்திகள் மற்றும் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 380 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். சாலையில் செல்லும்போது சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் அணிதல் போன்ற விதிமுறைகளை பற்றி உங்கள் தந்தை மற்றும் சகோதரர்களிடம் நீங்கள் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். உங்கள் பாதுகாப்புக்கென்றே தமிழக அரசு ‘காவல் உதவி” என்ற செயலியை உருவாக்கி உள்ளது.
அதில் 100, 101, 112 போன்ற அவசர உதவி எண்கள், முதல் தகவல் அறிக்கை நிலை, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், வாகன சரிபார்ப்பு (திருடப்பட்ட/காணாமல் போன), இழந்த ஆவண அறிக்கை, காவல் நிலைய இருப்பிடங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவை வசதிகள் உள்ளது. இதை மாணவிகளாகிய நீங்கள் உங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து உங்கள் ஆபத்து காலங்களில் பயன்படுத்தி உங்கள் பாதுகாப்பை காவல்துறை மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு விழிப்புணர்வு உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வின் போது பகல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், கல்லூரி சுயநிதி பிரிவு செயலர் ஜெயராணி, தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment