தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் பகுதியில் சிலர் கார் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டு இருப்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் தலைமையில் போலீசார் உடன்குடி பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது உடன்குடி ஒண்டி வீரன் நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, ஒரு காரில் வைத்து சிலர் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில், ஒரு வாலிபர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் பிடிபட்டவர்கள் முன்னிலையில் காரில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த காரில் 1 கிலோ 800 கிராம் கஞ்சா, ரூ.3 ஆயிரத்து 690 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் வைத்திய லிங்கபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபாரதி (34), தேரியூரை ேசர்ந்த சிவா (19), கரைசுத்து புதூரை சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (29) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் உடன்குடி தேரியூர் தெற்கு தெருவை சேர்ந்த சரத்குமார் (35) என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாரதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சரத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கஞ்சா விற்பனைக்கு பன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment