தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள தீவன அபிவிருத்தி திட்டங்கள், இறவையில் தீவிர பசுந்தீவனம் (Cofs-29 மற்றும் Desmanthes) வளர்த்தல்: இத்திட்டத்தின் கீழ் 20 ஏக்கரில் நீர்ப்பாசனவசதி உள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய குறைந்த பட்சம் ஒரு நபருக்கு 0.25 ஏக்கர் (25 சென்ட்) பசுந்தீவனம் வளர்க்க தேவைப்படும் 0.375 கிலோ தீவன சோளம் மற்றும் 0.5 கிலோ வேலிமசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அதிகபட்சமாக 1 ஏக்கர் வரை பயிரிடலாம். இத்திட்டத்தில் இதற்கு முன் மூன்று ஆண்டுகளில் பயன்பெறாதவராக இருத்தல் வேண்டும். மானாவாரியில் தீவன பயிர் (சோளம் மற்றும் காராமணி) வளர்த்தல்: நீர்பாசன வசதியற்ற கால்நடை வளர்ப்பேரின் நிலங்களில் இத்திட்டத்தின் கீழ் 70 ஏக்கரில், குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 0.50 ஏக்கர் (50 சென்ட்) பசுந்தீவனம் வளர்க்க தேவைப்படும் 6 கிலோ தீவன சோள விதைகள் மற்றும் 2 கிலோ காராமணி விதைகள் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக 1 ஹெக்டர் வரை பயிரிடலாம்.
மின்சார உதவியுடன் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்குதல் (50% மானியம்):இத்திட்டத்தின் கீழ் 10 வருடங்கள் பயன்பெறாத 30 பயனாளிகளுக்கு தலா 1 வீதம் 30 புல் நறுக்கும் கருவி 50% மானியமும், 50% பயனாளிகள் பங்குத் தொகையுடன் வழங்கப்படவுள்ளது.
எனவே, இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை நகர், கைப்பேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றோடு 30.10.2024-க்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் சிறு குறு விவசாமிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment