தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
தூத்துக்குடி, மே.15, வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப., நேற்று (14.05.2024) பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வாகன சட்ட விதிகளின் கீழ் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. வாகனங்களில் படி சரியாக உள்ளதா, அவசர வழி சரியாக உள்ளதா, உள்ளே சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளதா, முதலுதவி பெட்டியில் மருந்துகள் இருக்கிறதா மற்றும் வாகன ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளி வாகனங்களில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளனவா என்று ஆய்வு செய்யும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 200 பள்ளி வாகனங்கள் இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதை உறுதி செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும். ஆட்டோக்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்துதுறை மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
ஆய்வின்போது தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment