ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 May 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது!


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது!



ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று  கோலாகலமாக நடைபெற்றது.


துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் முதலாவது தலமாகவும், சூரியனுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ல் சுவாமி கள்ளபிரான், காய்சினிவேந்த பெருமாள், எம்இடர்கடிவான், பொலிந்து நின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இரவில் கருடவாகனத்தில் குடவரை பெருவாயில் எதிர் சேவையும் நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக சுவாமி கள்ளபிரான் அதிகாலையில் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.


திருத்தேர் ஓடிய வீதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தவர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. 


கடும் வெயிலையும் கூட பொருட்படுத்தாமல்  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad