திருச்செந்தூர் முருகன் கோயிலில் வசந்த திருவிழா ஏப்ரல் 14 இல் தொடக்கம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 April 2024

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வசந்த திருவிழா ஏப்ரல் 14 இல் தொடக்கம்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற ஏப்.14ம் தேதி சித்திரை மாத வசந்த திருவிழா ஆரம்பமாகிறது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழாவும் வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த திருவிழாவும் நடைபெறும். 

அதன்படி இந்தாண்டு வசந்த திருவிழா ஏப்.14.4.2024ஆம் தேதி தொடங்கி 23.4.2024 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வைகாசி வசந்த திருவிழாவும்  மே மாதம் 13.5.2024 முதல் 22.5.2024 வரையும்  10 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நாட்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். 


மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். பின்னா், கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறாா்.


அப்போது பக்தா்கள் வேல் விருத்தம், மயில் விருத்தம் மற்றும் கப்பல் பாடல்கள் பாட வசந்த மண்டபத்தை 11 முறை ஜெயந்திநாதர் வலம் வருவார். பிறகு தீபாராதனை நடைபெற்று, சுவாமி தங்க தேரில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் அருள்முருகன், இணை ஆணையா் காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

 

- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad