பள்ளி மாணவ மாணவியருக்கான சாலைப் பாதுகாப்புக் குழு சிறப்பு கூட்டத்தில் ஆட்சியர், மேயர் அறிவுரை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 July 2023

பள்ளி மாணவ மாணவியருக்கான சாலைப் பாதுகாப்புக் குழு சிறப்பு கூட்டத்தில் ஆட்சியர், மேயர் அறிவுரை

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  06.07.2023 அன்று நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழு (Road Safety Club) சிறப்பு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,   தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் "மாணவ, மாணவிகளாகிய நீங்கள்தான் வருங்கால இந்தியா,எனவே நீங்கள் சாலை விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.  நமது உயிர் மிகவும் உன்னதமானது. ஆனால் அதை சாலைகளில் இழக்கக் கூடாது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் தினமும் ஏராளமானோர் சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.  நாட்டுக்காக போரில் உயிரிழக்கலாம் அல்லது ஏதாவது ஆய்வு செய்து அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கலாம் அல்லது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரிழக்கலாம். ஆனால் சாலைகளில் உயிரிழக்கக்கூடாது.
ஓட்டுநர் உரிமம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்தான் பெற முடியும்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்துக்குள்ளானால் காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால் படிப்பு பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அரசு வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். தனியார் துறையிலும் நன்னடத்தை சான்றிழ் கேட்பதால் தனியார் துறை வேலைவாய்ப்பு கிடைப்பதும் பாதிக்கப்படும். மேலும், 25 வயது வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படமாட்டாது. உங்களைப்பற்றி பெற்றோர்கள் நிறைய கனவுகள் வைத்திருக்கிறார்கள்.வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் 3 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டலாம். மற்ற வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னர்தான் ஓட்ட வேண்டும். உங்கள் நண்பர்களிடமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை ஏற்று சிறந்த சாலை பாதுகாப்பு உள்ள தேசமாக இந்தியாவை மாற்றுவோம் என   தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தெரிவித்ததாவது: நாம் பயன்படுத்தும் சாதாரண மொபைல் போனுக்கே பாதுகாப்பாக உறை போட்டுத்தான் வைத்துள்ளோம். காலில் முள், கல் குத்திவிடக்கூடாது என்பதற்காக செருப்பு அணிந்துள்ளோம். அதேபோல் நமது உயிரை பாதுகாப்பது நமது கடமை. சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் இருப்பவர்களும் சட்டப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பள்ளி சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் எதிரே வாகனத்தில் வருபவர்கள் மீது மோதி அவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டால் பெற்றோருக்கு அந்த இழப்பினை ஈடு செய்யவே முடியாது. அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒரு மரம் நாம் வளர்க்க வேண்டும். தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு நீங்களும் மரம் வளர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோ.மரிய ஜோசப் அந்தோணி மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad