வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல் அலைகள்போல் குவிந்த பக்தர்கள்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 2 June 2023

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல் அலைகள்போல் குவிந்த பக்தர்கள்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு  பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


உலக புகழ் பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் இன்று விசாக திருவிழாவெகு விமரிசையாக நடைபெற்றது வருகிறது. இந்த விசாக திருவிழாவில் கலந்து கொண்டு ஒருநாள் சாமி தரிசனம் செய்வதால் ஒரு வருடத்தில் 12 மாதம் வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கு சமம் என்பது ஜதீகம்.



அந்த வகையில் பக்தர்கள் நேற்றில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வந்து இன்று காலையில் இருந்தே கடலில் மற்றும் நாலிகிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, அலகு குத்தியும், அங்க பிரதட்சணம் செய்தும், பால் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெரும் இவ்விழா கடந்த மே 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வந்த பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பின்னர் கோவில் சேர்தல் நடைபெற்றது.

10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.


தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், அதைத் தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலமாக வந்து கோவில் சேர்ந்தார்.


இதே போல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான நேற்று பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad