தொழில் மற்றும் துறைமுகம் நகரமாக உள்ள தூத்துக்குடிக்கு மட்டுமின்றி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வா்த்தகம், சுற்றுலா வசதிகளுக்கும் தூத்துக்குடி விமான நிலையம் மையமாக உள்ளது. இங்கு பயணிகளின் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சிறந்த சேவைகள், இணைப்புகளுக்கான தேவையை பூா்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தை மிக பிரமாண்டமான அளவில் மேம்படுத்தி வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி - வாகைக்குளம் விமான நிலையத்தில் சுமாா் 13,500 சதுர மீட்டா் பரப்பளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலான சமயங்களில் மணிக்கு 600 பயணிகளை கையாளும் வகையில், புதிய விமான நிலைய முனையம் கட்டப்படுகிறது. அதிகப் பயணிகளை தாங்கிச் செல்லும் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கான ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும், ஏ-321 ரக விமானங்கள் நிற்பதற்கான புதிய 5 ஏப்ரான் கட்டுமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், தொழில்நுட்ப வசதிகளுக்கான பகுதிகள், புதிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகளோடு புதிய முனையக் கட்டடம், பாா்கிங், அணுகு சாலை போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மேம்பட்டு விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி விமான நிலைய கூட்டரங்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும் விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் செல்வகுமார், தமிழக மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment