கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, நான்கு ரதவீதி மற்றும் உள்மாடவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பியது. காலை 5.28 மணிக்கு காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் கொடிமரத்திற்கு பூஜை செய்து திருவிழாக் கொடியினை ஏற்றினார்.
அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்காரமாகி ஷோடஸ தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அஜித் மற்றும் மணியம் செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாள் பூஞ்சப்பரம், பூத வாகனம், சிம்ம வாகனம், உள்பட பல்வேறு வாகனங்களில் பவனி வருகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற பிப்.12-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்.

No comments:
Post a Comment