நாசரேத் - ஓட்டை உடைசல் சிறப்பு பேருந்துகள், கண்டு கொள்ளாத நிர்வாகம் - கொதித்தெழும் பயணிகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 November 2023

நாசரேத் - ஓட்டை உடைசல் சிறப்பு பேருந்துகள், கண்டு கொள்ளாத நிர்வாகம் - கொதித்தெழும் பயணிகள்.

நாசரேத், நவ.19 - பல்வேறு நகரங்களிலிருந்து நாசரேத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் பாடு பெரும் திண்டாட்டமாக 
உள்ளதால் தரமான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் வழித்தடத்தில் சிறப்பு பேருந்து என்ற பெயரில் இயங்கக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் மிகவும் பழையதும் ஓட்டை உடைசலுடனும் உள்ளது.


நாசரேத் வழித்தடத்தில் ஓடக்கூடிய அதிகப்படியான அரசு பேருந்துகளும் பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் என்ற கணக்கில் தான் ஓடுகிறது. மேலும் வேறு வழித்தடங்களில் இயக்க முடியாமல் விட்டு விட்டு சென்ற பேருந்துகளையே இந்த வழித்தடத்தில் இயக்குகிறார்கள். இது குறித்து பலமுறை கேள்வி கேட்டும் எந்த பயனும் இல்லை. நாசரேத்திற்கு என்று கேட்டு வாங்கி வந்த பேருந்துகளையும் கொடுப்பதில்லை. 


இந்த பேருந்துகளில் ஏறி பயணம் செய்யும்போது என்ஜின் இரைச்சல், ரோடுகளில் உள்ள மேடு, பள்ளங்களில் இறங்கி ஏறும் போது பயணிகள் உடல் வலியால் கடும் அவதிப்படுகிறார்கள். பேருந்துகளில் இருக்கைகளும் சீராக இருப்பது இல்லை. பல இருக்கைகளில் சீட் கிழிந்து கிடக்கின்றன. மழை வந்தால் பேருந்துகுள்ளே மழைநீர் ஒழுகும் நிலையும், எந்த கண்ணாடி ஜன்னலையும் அடைக்க முடியாத நிலையும் தான் உள்ளது. வேறு வழித் தடங்களில் இயக்க முடியாத பேருந்துகளையே இந்த வழித்தடத்தில் இயக்குகிறார்கள். 

குறிப்பாக நாசரேத், சாத்தான்குளம் வழித்தடங்களில் இயக்கப்படும் தடம் எண் 146 வகை பேருந்துகள் பெரும்பாலும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன.  நாசரேத் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கல்வி, வேலை, தொழில் உட்பட பல்வேறு பணிகளுக்காக தினமும் 
நூற்றுக்கணக்கான பயணிகள் மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் படும் வேதனையை சொல்லி முடியாது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நாசரேத் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு இயக்கப்படுகின்றன. 


தனியார் பேருந்துகளில் இருக்கைகளும், பேருந்தும் நல்ல நிலையில் இருப்பதால் பெரும்பாண்மையான பயணிகள் தனியார் பேருந்துகளையே நாட வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நாசரேத் வழித்தடத்தில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய பேருந்துகளை இயக்கி பயணிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆகவே தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அரசு போக்குவரத்து கழகத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நாசரேத் வழித்தடத்தில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய பேருந்துகளை இயக்க வேண்டும். அவ்வாறு செய்யமால் இருப்பது தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் வரக்கூடிய எம்.பி., தேர்தலில் இதனுடைய ரிசல்ட் எதிரொலிக்கும் என்றும் நாசரேத் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad