திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 September 2023

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மெகா திட்ட பணி நடைபெற்றுவருகிறது. இதில் ராஜகோபுர வாசலில் உள்ள திருப்பணி மண்டபம் பழமை மாறாமல் புனரமைப்பட்டு வருவதாக அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தெரிவித்தார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய மெகா திட்டப்பணிகளும், கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் சாரம் கட்டி அதிலுள்ள சிதிலமடைந்த சிலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதே போல் ராஜகோபுர வாசலில் உள்ள முகப்பு மண்டபம், திருக்கல்யாணம் மண்டபம் மற்றும் திருப்பணி மண்டபம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. மேலும், அங்கு தரையில் பதிக்கப்பட்டிருந்த கடப்பா மற்றும் கோட்டா கற்கள் அகற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக கருங்கல் பதிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள வெள்ளைக் கற்களால் ஆன தூண்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு கலவையால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக ஆற்று மணல், பொள்ளாச்சி சுண்ணாம்பு, கடுக்காய் மற்றும் வெல்லம் கலந்த கலவை எந்திரம் மூலம் அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன், இணை ஆணையர் கார்த்திக், நிர்வாக பொறியாளர் முருகன், ஹெச்.சி.எல். மேற்பார்வையாளர் பிரவின் ஆகியோர் உடனிருந்தனர்.


பின்னர் அறங்காவலர் குழுத்தலைவர் கூறுகையில், கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்காக கோவில் உள் மற்றும் வெளி பிரகாரம், ராஜகோபுரம் மற்றும் திருப்பணி மண்டபம் ஆகியவை ரூ.16 கோடியே 60 லட்சம் செலவில், ஆகம விதிப்படி, தொல்லியல் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கல் மண்டபங்கள் மற்றும் சிலைகள் பழமை மாறாமல் புனரமைக்கும் பணியில் அரசு அங்கீகாரம் பெற்ற சிற்பிகள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர், என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad